வணக்கம் உங்களை அங்கதம் ஆரா வலைத்தளதிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.பூரட்டாதி நட்சத்திரத்தில் (Poorattadhi / Purva Bhadrapada) பிறந்த உங்களுடைய எதிர்கால வாழ்க்கை, குணாதிசயங்கள், அதிர்ஷ்ட யோக பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பார்க்கலாமா? வாங்க பார்க்கலாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் அமைப்பும் புராணப் பெருமையும்
பால்வெளிப் பாதையில் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமைப்புதான் பூரட்டாதி. பூரட்டாதி நட்சத்திரம் கட்டில் போன்ற வடிவமைப்பு உடைய நட்சத்திரம். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை அஜைகபாதன் (Ajaikapada) சிவனின் ஒரு வடிவம் அல்லது நெருப்புக் கடவுளாகிய அக்னியின் வாகனமாகச் சொல்லப்படுகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் (Guru / Jupiter). விருட்சம் (புனித மரம்) தென்னை மரம் (Coconut tree). பூரட்டாதியின் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதங்கள் கும்ப ராசியிலும் (Aquarius), 4ஆம் பாதம் மீன ராசியிலும் (Pisces) அமைந்துள்ளன.
'பூரட்டாதி' என்றால் 'முதல் ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்' (first blessed feet) என்று பொருள். பூரட்டாதி நட்சத்திரத்தின் அடையாளக் குறியீடுகள் வாள் (sword), கட்டிலின் இரண்டு கால்கள் (two legs of a cot), மற்றும் இரண்டு முகம் கொண்ட மனிதன் (two‑faced man). இந்த நட்சத்திரம் மாற்றுத்திறனாளிகளுக்கும் உகந்தது; வெற்றியைக் குறிக்கும் நட்சத்திரமும் கூட. இரண்டு முகம் கொண்ட மனிதன் என்பது கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் குறிப்பதாகும். வர்ஷாதி நூல்களில் இதன் அதிதேவதையை குபேரனாகவும் (Kubera) குறிப்பிடுகிறார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியான குரு பகவான் (பிரகஸ்பதி), சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகன். இவருக்குத் தாரை என்ற மனைவி உண்டு. நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களைச் செய்து தேவர்களின் குருவாகப் பதவி வகிக்கிறார். தித்தையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவகிரக அந்தஸ்தைப் பெற்றார். அதனால்தான் வியாழ கிரகம் 'குரு கிரகம்' எனப் போற்றப்படுகிறது. குரு பகவான் ராஜ கிரகங்களில் ஒருவர்.
ஜோதி முனி சித்தர் (Jyothi Muni Siddhar) ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர் இவருக்குரிய நட்சத்திரம் இந்தப் பூரட்டாதி.
பூரட்டாதி நட்சத்திரத்தின் குணாதிசயங்களும் ஆளுமையும் வசீகரமும் மிடுக்கும்
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்தப் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், பார்ப்பதற்கு வசீகரமான தோற்றமும், மிடுக்கான தோற்றமும் கொண்டவர். மிகச்சிறந்த புத்திசாலி. நல்ல நம்பிக்கை, நல்ல எண்ணம் கொண்டவர்; மற்றவர்களுக்கு எப்போதும் உதவத் தயாராக இருப்பீர்கள்.
அமைதியை விரும்புவீர்கள். ஏமாற்றுக்காரர்கள், பொய் பேசுபவர்களிடமிருந்து தள்ளியே இருப்பீர்கள் ஏனென்றால் நீங்கள் உண்மையையே விரும்புவீர்கள், உண்மையையே பேசுவீர்கள், உண்மையாகவே நடப்பீர்கள். ஒருவர் உங்களுக்கு நம்பிக்கைக்குரியவராகிவிட்டால், அவர்களுக்கு எப்பாடுபட்டாவது ஓடிச் சென்று உதவி செய்வீர்கள். தூய்மையான மனசு, நல்ல நடத்தை கொண்ட உங்களுக்குக் கல்வி, ஞானம் எல்லாம் சிறப்பாக அமையும். எந்த விஷயத்தையும் அறிவுடன் ஆராய்ந்து முடிவெடுப்பீர்கள்.
பூரட்டாதி குருவின் நட்சத்திரம் என்பதால், உங்கள் வாழ்க்கையில் பொருளாதாரப் பற்றாக்குறை என்பதே இருக்காது. எப்போதும் உங்களிடம் பணம் இருக்கும். அப்படி ஏதாவது பணப்பிரச்சனை வந்தாலும், ஏதோ ஒரு வழியில் பணம் உங்களைத் தேடி வந்து சேரும். எந்த விஷயத்தையும் விசாலமான பார்வையில் பார்க்கும் குணம் கொண்டவர். நல்ல ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்; அதே சமயம் கையிருப்புப் பணம் குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள். தர்ம குணம் அதிகம் உங்கள் வருவாயில் பெரும்பகுதி தர்மத்திற்குச் செலவாகும்.
நீங்கள் ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால், சாப்பாடு தண்ணீர் கூட எதிர்பாராமல் அந்தக் காரியத்தை முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். கிடைக்கும் பணத்தில் சிலவற்றை உங்கள் குடும்பத்தாருக்குத் தெரியாமலே சேர்த்து வைப்பீர்கள். உங்களில் சிலருக்கு அதிகமாகப் பணம் சேர்வதால், எந்தப் பணத்தை எங்கே சேர்த்து வைத்தோம் என்றே தெரியாமல் போய்விடும்; பின்னாளில் அந்தப் பணம் உங்களை அறியாமலேயே உங்களைத் தேடி வரும் அது உங்களுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் தரும்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் சாஸ்திர பலன்களும் சமூகப் பார்வையும்
சாஸ்திரம் இந்த நட்சத்திரக்காரர்களைப் பற்றிச் சொல்கிறது: மெல்லிய நடை உடையவர், வெகுளியாக இருப்பீர்கள்; உங்கள் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது; எந்த வழக்காக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்த்து வைப்பீர்கள்; பால், நெய், தயிர் விரும்பி உண்பவர்; கல்வி உடையவர், தனவந்தர், சாதுரியமாகப் பேசி பொருள் திரட்டுபவர்.
உங்களுக்கு பெரிய பெரிய சிந்தனைகள் மனதில் உதிக்கும்; தொலைநோக்குப் பார்வை உடையவர். மற்றவர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி மனவருத்தம் அடைவீர்கள். ஒரு பதற்றமான விஷயத்தை பதற்றமில்லாமல், பக்குவமாக வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். சில நேரங்களில் சில விஷயங்களைத் தவறவிட்டு அப்பாவித்தனமாக இருப்பீர்கள்.
நீங்கள் "என் கொள்கைதான் சரி" என்று இல்லாமல், மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எப்போதும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களின் நலனிலும் அக்கறை கொள்வீர்கள். அனைத்து விஷயங்களும் அறிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். எந்தத் துறையில் இருந்தாலும், அந்தத் துறையில் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்க மாட்டீர்கள்; தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பீர்கள்.
உங்களில் சிலருக்குச் சமூக ஆர்வம் இருக்கும்; சமூக நலன்களில் அக்கறை கொள்வீர்கள். திருமணம், கல்வி போன்ற விஷயங்களுக்கு அதிகமாக உதவி செய்வீர்கள். முன்கோபம் இருந்தாலும் சிறந்த குணவானாக இருப்பீர்கள்.
உங்களில் சிலருக்குக் குடும்பத்தில் ஆர்வமில்லாமல் துறவறம், ஆன்மீகம், தத்துவ ஞானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அந்த வழியில் செல்வீர்கள். பிறருடைய சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள்; உங்கள் சொத்தும் பிறருக்குச் செல்வதை விரும்ப மாட்டீர்கள். சிறு வயதிலேயே அதிக உலக அனுபவங்கள் கிடைக்கும்; சிலருக்குச் சிறு வயது வாழ்க்கை கசப்பான அனுபவங்களைத் தந்திருக்கும். மத்திம வயதுக்கு மேல்தான் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.
எந்தச் செயலில் ஈடுபடுவதற்கு முன்னும் அதிகமாக யோசித்துப் பார்த்துவிட்டுச் செயல்படுவீர்கள். உங்களில் சிலர் குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்; கபநாடி உங்களுக்கு வேலை செய்யும். அதனால் சூட்டைத் தரக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் கொள்கை, கோட்பாட்டிலிருந்து ஒருநாளும் தவற மாட்டீர்கள். சிலருக்கு ஆறாம் அறிவு (sixth sense) சிறப்பாக வேலை செய்யும். மற்றவர்களின் நிர்பந்தத்திற்கு அவ்வளவு சீக்கிரம் உடன்பட மாட்டீர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் அநேகர் சித்தர்களாகவும், மகான்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் தாமரையிலை தண்ணீர் போலத்தான் குடும்ப வாழ்க்கையை நடத்துவீர்கள் ஒட்டாமல், நீரில்லாமல். இந்த நட்சத்திரத்தில் இரண்டு முகங்கள் இருப்பதைப் போல, ஒரு சிலருக்கு ஆரம்பகால வாழ்க்கையில் பற்று இருக்கும்; மத்திம காலத்தில் பற்று இருக்காது; இறுதி காலத்தில் மீண்டும் பற்று வரும். இன்னொரு சிலருக்கு ஆரம்பத்தில் பற்றே இருக்காது; மத்திம காலத்தில் அதிகப் பற்றுள்ளவராக இருப்பீர்கள்; இறுதியிலும் பற்றில்லாமல் வாழ்வீர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் தொழில், வெளிநாட்டு யோகம், மற்றும் சிறப்புகள்
சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்தவரை உதவி செய்வீர்கள்; யாரையும் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். தொழில் செய்தாலும், உத்தியோகம் சென்றாலும், அறிவைக் கொண்டு எப்படிப் பணம் சம்பாதிப்பது என்பதை எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். சிறு வயதிலேயே எல்லாப் பொறுப்புகளையும் சுமக்கும் நிலை ஏற்படலாம். எப்போதும் எதிர்மறைச் சிந்தனைக்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்; எதிர்மறையான சிந்தனைகளும் சூழ்நிலைகளும் வந்தால், அதிலிருந்து எப்படி வெளிவருவது என்பதையே பார்ப்பீர்கள்.
சிலருக்கு எதிர்பார்த்த அளவுக்குத் தாய்ப் பாசம் கிடைக்காமல் போகலாம்; தாய் இல்லாமலும் போகலாம், அல்லது தாய் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பாசத்தைப் பெற முடியாமல் போகலாம். ஆனால், வாழ்க்கைத் துணையால் ரொம்ப சந்தோஷமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். மற்றவர்கள் உங்களை எப்படி விமர்சித்தாலும், உங்களைப் பொறுத்தவரை நேர்மையானவர், நம்பிக்கையானவர், நியாயமானவர். கலைகளில் அதிக ஈடுபாடு உண்டு. பெரிய மனிதர்களுடைய சகவாசம் ஏற்படும்; எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். சிறந்த ஞானமும் பக்தியும் கொண்டவராகத் திகழ்வீர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் வாழ்க்கையும் திசாபலன்களும்
குரு திசை (16 வருடம்): நீங்கள் பிறக்கும்போதே குரு திசையில் பிறந்திருப்பீர்கள். பள்ளிப் படிப்புக் காலத்தில் இந்தத் திசை நடக்கும். குரு பகவான் கல்விக்குச் சாதகமான அமைப்பில் இருந்தால், பள்ளிக் கல்வி சிறப்பாக அமையும். பூரட்டாதியின் 3ஆம், 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விவரமறியாத குழந்தைப் பருவத்திலேயே இந்தத் திசை முடிந்துவிடும்.
சனி திசை (19 வருடம்): அடுத்து சனி திசை ஆரம்பிக்கும். கல்லூரிப் படிப்புக்கு சனி பகவான் சாதகமான அமைப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் கல்லூரிப் படிப்பைச் சிறப்பாகப் படித்து, விரும்பிய துறையில் பட்டம் பெற முடியும். சனி கல்விக்குச் சாதகமாக இல்லையென்றால், சிலருக்குக் கல்லூரிப் படிப்பு தடைப்பட்டு முடிக்க முடியாமல் போகலாம்; அல்லது தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். இது உங்கள் பிறப்பு ஜாதகத்தின் பலத்தைப் பொறுத்தது. படிப்பு முடிந்த உடனே தகுதியான வேலை கிடைக்கும். படித்த துறை சார்ந்த உத்தியோகம் அமையும். உரிய வயதில் திருமணம் நடக்கும்; நீங்கள் விரும்பியபடி வாழ்க்கைத் துணை அமைவார். வாழ்க்கைத் துணையால் சமூகத்தில் கௌரவமும் அந்தஸ்தும் கிடைக்கும். அவருடன் அன்பாக நடந்துகொள்வீர்கள். மகிழ்ச்சிகரமான குடும்பம் அமையும். குழந்தைச் செல்வங்கள் உரிய வயதில் கிடைத்து மகிழ்ச்சியைத் தரும். உங்களில் சிலர் உத்தியோகம் பார்க்கும்போதே சைடு பிசினஸ் (side business) செய்து நல்ல பொருள் ஈட்டுவீர்கள்; பிசினஸ் நன்றாக வளர்ந்தால் முழுநேரமும் அதிலேயே ஈடுபட்டு அதிகப் பண வரவு பெறுவீர்கள். சனி திசையில் அனுபவக் கல்வி (experiential learning) அதிகமாகப் படிப்பீர்கள்; இந்த அனுபவங்கள்தான் உங்கள் வாழ்க்கையில் வெற்றிப் படிகளாக அமையும்.
புதன் திசை (17 வருடம்): அடுத்து புதன் திசை ஆரம்பிக்கும். இந்தப் புதன் பகவான் உங்கள் ஜாதகத்தில் ஆரோக்கியம், குடும்பம், தொழில், பொருளாதாரம் இவற்றுக்குச் சாதகமான அமைப்பில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். புதன் திசையில் அழகிய வீடு, உயர்ரக வாகன யோகம் அமையும். சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் அந்தஸ்தும் கிடைக்கும். உங்கள் அறிவுத் திறனாலும், பேச்சாற்றலாலும் வியாபாரத்தைப் பன்மடங்கு பெருக்குவீர்கள். வெளிநாடு சென்று தொழில் செய்யும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைவீர்கள். அதிக பண வரவால் அசையாச் சொத்துக்கள் (immovable properties) சேரும். சிலர் கலைத்துறைகளில் ஈடுபட்டு சோசியல் மீடியாக்களில் (social media) பிரபலமாகி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குள் ஒரு ரகசிய வாழ்க்கையும் (secret life) இருக்கும். சிலருக்கு விண்வெளி சம்பந்தமான விஷயங்களில் ஆர்வம் அதிகம். மன அழுத்தம் சில நேரங்களில் அதிகரிக்கும் – அதனால் தியானம் செய்யும் பழக்கத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தாருக்குத் தேவையானதைச் சிறப்பாகச் செய்து கொடுப்பீர்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உங்கள் சொந்தக்காரர்களும் நண்பர்களும் அதிகமாகப் பயன்பெறுவார்கள்; ஆனால் அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் எல்லோரும் கைவிடுவார்கள் – ஆனால் கடவுள் மட்டும் உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்து கொண்டே இருப்பார். உங்களுக்கு என்ன தேவையோ அது தக்க சமயத்தில் தேடி வரும். பெரும்பாலானோர் உடலை வருத்திக்காமல் அறிவைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பதையே விரும்புவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் (share market) முதலீடு செய்து பணத்தை அள்ளுவீர்கள். சிலர் வட்டித் தொழில், சீட்டுக் கம்பெனி நடத்துவீர்கள். சிலருக்கு கள்ளத்தனமான பணப் புழக்கங்களும் (underground finance) இருக்கலாம். எவ்வளவு வசதி வந்தாலும் பழசை (past) மறக்க மாட்டீர்கள். உங்கள் உடைகள், ஆடை ஆபரணங்கள் மதிப்பு மிகுந்ததாக இருக்கும்; பொன் பொருள் ஆபரணங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
குறிப்பு: உங்கள் ஜாதகத்தில் குரு, சனி, புதன் – இந்த மூன்று கிரகங்களும் நல்ல தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த மூன்று கிரகங்களின் திசைகளும் உங்கள் சம்பாதிக்கும் வயதில் வருகின்றன. இவை 8, 12ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால், மேற்சொன்ன பலன்களுக்கு எதிர்மாறான தடைகளும், தடங்கல்களும் ஏற்படும்.
கேது திசை (7 வருடம்) மற்றும் சுக்கிர திசை (20 வருடம்): அடுத்து கேது திசையும், அதற்கடுத்து சுக்கிர திசையும் வரும். இவை உங்கள் வயோதிக காலத்தில் நடக்கும். இந்தக் கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் 5, 7, 11ஆம் பாவங்களைத் தொடர்பு கொண்டிருந்தால், உங்கள் வயோதிக காலம் மிகவும் சந்தோஷமாக அமையும். அதிகமாகத் திருப்பணிகள் செய்வீர்கள், நன்கொடைகள் வழங்குவீர்கள், தான தருமங்கள் செய்வீர்கள். தீர்த்த யாத்திரை, தல யாத்திரை போவீர்கள். மன்னிக்கும் சுபாவம் உள்ளவராகத் திகழ்வீர்கள். தெய்வீக குணம் கொண்ட உங்களுக்குத் தெய்வீக அருள் சுலபமாகக் கிடைக்கும். புதிரான விஷயங்கள், தத்துவங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். பிள்ளைகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்வீர்கள். அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக (role model) திகழ்வீர்கள். உங்கள் சொத்துக்களைக் கண்டு உங்கள் வம்ச வாரிசுகள் சந்தோஷமும் மனமகிழ்ச்சியும் அடைவார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் பரிகாரங்கள்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்தப் பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. இவை உங்கள் இரட்டை முகங்களைச் சமநிலைப்படுத்தி, வாழ்க்கையில் இன்னும் அதிக வெற்றியைத் தரும்.
குரு பகவானை (Guru / Jupiter) வணங்குவது முதன்மையான பரிகாரம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து, மஞ்சள் கட்டி, வெல்லம், பொரிப்பருப்பு, கடலை, பலாப்பழம் (jackfruit), தென்னைப் பழம் (coconut), மஞ்சள் பூக்களைத் தானம் செய்யவும். குரு மந்திரமான "ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் ஸ குரவே நமஹ" என்பதை 108 முறை ஜெபிக்கவும். பிரகார வழிபாடு (circumambulation) கோவிலைச் சுற்றி வருவது – குருவுக்கு மிகவும் பிடித்தமானது.
தென்னை மரத்தை (Coconut tree) வணங்குங்கள். தென்னை மரத்தின் அடியில் அமர்ந்து, மரத்திற்குத் தண்ணீர் ஊற்றி, 7 முறை வலம்வாருங்கள். தென்னை மரத்தின் தேங்காய், இலையை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்துப் பூஜிப்பது நல்லது. தென்னை நீர் (coconut water) தானம் செய்வது மிக உயர்ந்த பரிகாரம்.
அஜைகபாதரையும், குபேரரையும் வணங்குங்கள். ஒவ்வொரு பௌர்ணமி (full moon) அன்றும், வெள்ளை நிற ஆடை அணிந்து, வெள்ளைப் பூக்கள், சர்க்கரை, அரிசி, சந்தனம், சிவப்புக் கயிறு, வெற்றிலை, பாக்கு, பொன் நாணயம் போன்றவற்றைத் தானம் செய்யவும். "ஓம் குபேராய நமஹ" மற்றும் "ஓம் அஜைகபாதாய நமஹ" என்று ஜெபிக்கவும்.
ஜோதி முனி சித்தரை வணங்குங்கள். அவருக்கு விளக்கேற்றி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் குங்குமம், பச்சரிசிப் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். "ஓம் ஜோதி முனியே நமஹ" என்று சொல்லி வழிபடுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இதைச் செய்வது நல்லது.
உங்கள் இரட்டை மனப் போக்கை (dual nature) ஒருங்கிணைக்க முயற்சிக்கவும். ஒரு கட்டத்தில் பற்று, மற்றொரு கட்டத்தில் வைராக்கியம் இதைச் சமநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். "எது நிலையானது, எது நிலையற்றது" என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
குளிர்ச்சியான உடல்வாகு உங்களுக்கு இருப்பதால், சூடான உணவுகளை (warm foods) அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, மிளகு, தேன், துளசி, கிராம்பு போன்றவை உங்கள் கபத்தை சமநிலைப்படுத்தும். தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடிப்பது நல்லது.
தான தருமங்கள் செய்வதில் உங்களுக்கு விருப்பம் உண்டு. அதைத் தொடருங்கள். குறிப்பாக தென்னை மரத்தின் மூலமாகக் கிடைக்கும் பொருட்களை (தேங்காய், தென்னை நீர், தென்னை ஓலை) தானம் செய்வது குருவுக்கு மிகவும் பிடிக்கும். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது இந்த நட்சத்திரத்தின் சிறப்பான பரிகாரம்.
முன்கோபத்தைக் கட்டுப்படுத்திப் பழகுங்கள். பூரட்டாதிக்காரர்களுக்குக் கோபம் வந்தால், உடனே பதிலுக்கு வார்த்தைகள் வெடித்துவிடும். கோபம் வரும்போது, "10 நிமிடம் பொறு, பிறகு பேசு" என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக, உங்கள் முழு ஜாதகத்தையும் ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நிலையையும், குரு தோஷம், குபேர தோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு: பூரட்டாதி உங்களுக்கு வசீகரத் தோற்றத்தையும், மிடுக்கையும், புத்திசாலித்தனத்தையும், தர்ம குணத்தையும், விந்தையான பணப் பெருக்கையும், இரட்டைக் குணங்களையும் தந்திருக்கிறது. இந்த இரண்டு முகங்களுக்குள் நீங்கள் ஒரு முழுமையான வெற்றியை அடையுங்கள். குரு பகவானின் அருளால் உங்கள் வாழ்க்கை எப்போதும் பொன்னானதாக இருக்கட்டும்!
Post a Comment